'விழுதுகள்' கதையைப் படித்துவிட்டு என் நண்பரொருவர் 'என்ன நினைத்து நீங்கள் இதை எழுதினீர்கள்' என்று என்னைக் கேட்டார்.ஓங்கூர் சாமி எனது கற்பனை அல்ல. அப்படி ஒரு கற்பனை செய்ய எனக்குத் தெரியாது. எனக்குக் கடவுள் நம்பிக்கையோ சாமியார் பித்தோ கிடையாதுதான். எனினும் நான் என்னை நம்புகிறவன்; வாழ்க்கையை நம்புகிறவன். அதில் நான் கூறியுள்ள ஓங்கூர்சாமிகளின் தன்மைகள் யாவும் விசாரித்து அறிந்ததும் உடனிருந்து அனுபவித்தவையுமாகும். அந்த மடத்தில் அவர்களில் ஒருவனாய் வீற்றிருந்து சிரித்துச் சிரித்துப் பொழுதைக் கழிப்பதில் காவியம் படிப்பது போன்ற சுகானுபவத்தை நான் கண்டிருக்கிறேன்.
ஓங்கர் சாமி ஞானபோதகர் அல்ல. வேஷமோ நடிப்போ அற்று ஊருக்கு மத்தியில் வாழ்ந்தவர். அந்தத் தன்மை, அவரது மழலை, அவரிடம் குடி கொண்டிருந்த குழந்தைமை முதலிய பண்புகள் என் மனத்தைப் பெரிதும் கொள்ளை கொண்டன.அந்தக் கதையில் வரும் அனைவருமே – ஓரிரு பாத்திரங்களைத் தவிர - நான் சந்தித்த, இப்போது உயிரோடிருக்கிற சில மனிதர்களின் உருவங்களே...
துறவின் அழகையும், அவற்றில் நான் கண்டு பிரமிக்கும் சில சிறப்புக்களையும் நான் மதிக்க வேண்டும். அவர்களிடமும் கூட 'கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள்மேல் காதல்' - என்ற விதமாய் மனிதாபிமானம் குடிகொண்டிருப்பது எவ்வளவு புகழ் பாடத்தக்க விஷயம்!வாழ்க்கையின் பெருமையை வாழ்க்கையைத் துறந்தவர்களின் மூலமே உணர்வதும் உணர்த்துவதும் மிகவும் அர்த்தமுள்ள விஷயம்தான் அல்லவா!