ஆபத்துக்குப் பொய் சொல்வதில் பாவமில்லை என்பார்கள். தருமர், "அஸ்வத்தாமா, அத குஞ்சரஹா" - என்று துரோணாச்சாரியாரை நிலைகுலையச் செய்யும் பொருட்டு சொல்லிய ஒரு பொய்யால், அதுவரை நிலத்தில் பதியாமல் ஓடிக்கொண்டிருந்த அவரது ரதம், பூமியில் படிந்து விட்டதாம்.
எனக்கு இரதம் எதுவும் கிடையாது. ஏற்கனவே, எனது கார் நிலத்தில் பதிந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நிறையப் பொய்களைத் துணிந்து சொல்லலாம். ஆனாலும், ஒரு எழுத்தாளர் பொய் சொல்வதற்கு முன்பாக நிறைய யோசிக்க வேண்டும். இன்று துணிந்து பொய் கூறினால், நாளை உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதும் போது, ஆதாரங்களைத் தந்தாலும், அவற்றை வாசகர்கள் நம்ப மறுப்பார்கள். சரித்திர நாவல்களை எழுதும்போது, "நீங்கள் எழுதுவது உண்மை சம்பவங்களா அல்லது கற்பனையா..." என்பது போன்ற கேள்விகள் எழாமல் இருக்காது. சரித்திரக் கதைகளைப் படிக்கும் வாசகர்கள், உண்மையான கதாபாத்திரங்களை கற்பனை என்றும், கற்பனை பாத்திரங்களை உண்மையானவை என்றும் கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம், "நமது கற்பனை பாத்திரம்தானே..." என்று சரித்திர எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை பாத்திரங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றினைச் சிறப்பாகப் படைத்துவிடுகின்றனர். எனவேதான், கற்பனை பாத்திரங்களான நந்தினியும் ஆழ்வார்க்கடியானும், இன்றுவரை நம் மனதினில் வாழ்ந்து வருகின்றனர். நான் கூடியவரையில் நிஜ பாத்திரங்களை சரித்திரத்தில் கண்டது போலவே சித்தரித்து வருகிறேன். குறிப்பாக, இந்தக் கதையின் மைய பாத்திரங்களாக வருபவர்களின் குணநலன்களை சரித்திரத்தில் உள்ளபடிதான் படம் பிடித்திருக்கிறேன்.
தர்மரைப் போன்று நானும் ஒரே ஒரு பொய்யினை முதன்முறையாக சொல்கிறேன்.
"இந்தக் கதை முழுவதும் என் கற்பனையில் உதித்தது தான்!"
- 'காலச்சக்கரம்' நரசிம்மா
குறிப்பு: இந்தக் கதை 918 கி.பி. தொடங்கி, 957 கி.பி. அரிஞ்சய சோழனின் மர்மமான திடீர் மரணம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.